Skip to main content

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்!

ற்செயலாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..!

அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!)

பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்சி நசன் தமிழ்ச் சிற்றிதழ்களின் சேகரிப்பாளராக பலராலும் அறியப்படுபவர். 1980 களிலிருந்து இவர் சிற்றிதழ்களைச் சேகரித்து வருகின்றார். அத்துடன் சிற்றிதழ்ச் செய்தி என்னும் இதழையும் வெளியிட்டார். சிற்றிதழ்ச் செய்தி இந்திய இதழ்கள் மட்டுமல்லாது ஈழத்து இதழ்கள், புலம்பெயர் இதழ்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டது.

பல நண்பர்கள் பொள்ளாச்சி நசனுக்கு இதழ்களையும் நூல்களையும் அனுப்பினர். அத்துடன் கனடா, பிரான்ஸ், சுவிஸ், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்தும் இதழ்கள் அனுப்பப்பட்டன. இவ்வாறு சேகரித்துப் பாதுகாத்த நூல்களையும் இதழ்களையும் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாகவும் இலகுவாகவும் கிடைக்கச் செய்ய வேண்டும் என பொள்ளாச்சி நசன் விரும்பினார். அவ்வகையில் தமிழம் மின்னூலாக்கத் திட்டம் 09-10-2008 முதல் செயற்பட்டு வருகின்றது. அதில் இணைக்கப்பட்டிருக்கும் நூல்களை www.tamilzham.net என்ற இணைய தளத்தில் காணலாம்.!

அதே இணையதளத்தில் , தமிழைப் பயிற்றுவிக்கவும் முயற்சி செய்கிறார். 1999க்குப் பிறகு தாய்த்தமிழ் பள்ளிகளை பொள்ளாச்சி சூளேசுவரன்பட்டியில் தொடங்கி நடத்தி வருகிறார்.

அவரை அதிகாலை.காம் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறது
.

அதனால் , செய்ற்கரிய செய்வர் பெரியர் என்ற முதுமொழிக்கு உகந்தவர் திரு.பொள்ளாச்சி நசன் என்பது உண்மைதானே?

அவருக்கு நமது நன்றிகளையும் , வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும் , பாராட்டுதல்களையும் சமர்ப்பிப்போம்..! அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறேன்.

இனி , அவர் சேகரித்து மின்னிதழாக வெளியிட்ட சில சிற்றிதழ்களிலிருந்து சில சுவாரசியமான எழுத்துக்கள்…..!


1955 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 15ஆம் திகதி வெளிவந்த தமிழ்முழக்கம் சிற்றிதழ் , உயர்திரு. கவி.கா.மு.ஷெரிப் அவர்களால் வெளியிடப்பட்டது.

பெரியாரையும் , அண்ணாதுரையும் விமர்சித்து ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு கட்டுரை என்னைக் கவர்ந்தது. அதில் வைக்கப்பட்டிருக்கும் முழுமையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டாலும் , பெரியாரை நேசிக்கும் நான் பெரியாரிடம் முரண்படும் ஒரு விடயத்தைப் பற்றி அக்கட்டுரை விரிவாக அலசுகிறது. முழுக்கட்டுரைக்கு தமிழ் முழக்கம் இதழைப் பார்க்கலாம்.

பெரியாரின் “நாம் திராவிடர்கள்” என்ற கொள்கையிலிருக்கும் முரண்பாடுதான் அது. தமிழ்த்தேசியம் என்கிற கருத்துருவாக்கம் தமிழகத்தில் வலுப்பெற இன்றும் , அன்றும் தடையாக உள்ளதே “திராவிட”வியல் கருத்தாக்கம்…..அதையே முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது திராவிடத்தால் வயிறு வளர்க்கும் கட்சிகள் வாய்பொத்திக் கொண்டிருந்த நிகழ்வுகள் காட்டுகிறது.

சுதந்திரத்திற்குப் பின்னால் வந்த பாதி ஆண்டுகள் தமிழகத்தைத் தமிழரல்லாதவர்கள் ஆண்டதும் , இன்றைக்கு இருக்கும் திமுக , பாமக , விடுதலைச் சிறுத்தைகள் , புதிய தமிழகம் தவிர்த்த அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் தமிழைத் தமது தாய்மொழியாகக் கொண்டிருக்காதவர்கள் என்ற வேதனையான உண்மையும் நம்மைச் சுட்டுகிறது. மாற்று மொழியாளர்களை நாம் நேசிக்காதவர்கள் கிடையாது. அதற்காக நம்மை நாமேதான் ஆளவேண்டுமே தவிர வேற்று மொழியாளர்கள் நம்மை ஆளவதை சகிக்க வேண்டுமானால் நாம் மெட்ராஸ் மாகாணமாகவே இருந்திருக்கலாமே?

அதே தமிழ் முழக்கத்திலிருந்த இன்னொரு அலசல் “இலங்கைச் செய்தி” என்ற தலைப்பில் வந்ததாகும். 1955 ஆம் ஆண்டே இலங்கையில் இன முரண்பாடு எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கான வரலாற்று ஆதாரம்…

இலங்கை இந்தியப் பிரதம மந்திரிகளினால் கைச்சாத்திடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட டில்லி ஒப்பந்தத்தின் கொள்கைகளை அமல் படுத்தும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லையென்றும் , ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்ட வாக்குறுதிகளுக்கு முற்றும் முரணாக இலங்கையரசாங்கம் நடந்து கொள்கிறது என்றும் பாரதப் பிரதமர் நேரு அவர்கள் குற்றம் சாட்டுவதாக அந்த அலசல் குறிப்பிடுகிறது.

அதோடு மட்டுமின்றி , வெகுவிரைவில் இலங்கையில் பொதுத்தேர்தல் நடக்கப்போவதாகவும் , இலங்கை இந்தியர்களின் மீது இலங்கையரசாங்கம் காட்டி வரும் அநீதியான கொள்கைகளை அடியோடு ஒழித்துக்கட்ட வரும் பொதுத்தேர்தல் மக்களுக்கு வாய்ப்பினை அளித்திருப்பதாகவும் சுட்டுகிறது அவ்வலசல்…


நேருவிற்குப் பின் பிரதமரான சாஸ்திரி அவர்கள் , இந்தியாவிற்கே பாதிக்கும் மேற்பட்ட மலையக இந்தியர்களை அழைத்துக்கொண்டார் என்பது நாம் இந்திய அரசாங்கத்தின் சொதப்பல்களின் வரலாறாக குறித்துக்கொள்வது முக்கியம்…..


அதே புரட்டாசி இதழில் கவி.கா.மு.ஷெரிப் எழுதிய கவிதையொன்று உங்களின் பார்வைக்கு…
(பல்லவி)
வாளினைக் கையில் எட்டா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ - (வா)
(அநுபல்லவி)
நாளெல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ – (வா)
(சரணம்)
ஆள்வோரும் செல்வாக்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலில் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே – நீ – ( வா )

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்தக் கவிதை இன்றும் எப்படி பொருந்துகிறது என்ற உண்மையை வியந்து இந்தச்சிற்றிதழை எமக்குத் தந்த திரு.நசனுக்கு நன்றி கூறி இந்தப் பதிவினை முடிக்கிறேன்.

படங்கள் உதவி : அதிகாலை.காம்

பிரிதொரு சமயத்தில் பிடித்த இன்னொரு சிற்றிதழுடன் சந்திப்போம்…..

உயர்திரு.பொள்ளாச்சி நசனின் பணி சிறக்க வாழ்த்துவோம். நன்றி.!

Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ