Skip to main content

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே.

எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு.

பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர்.

அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார்.

கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் முன்முயற்சியால் அந்த ஜல்லிக்குழி மேடாக்கப்பட்டு 'கலைஞர் நகர்' ஆக்கப்பட்டது. அதற்கு மட்டும் திரு. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் குறைந்தபட்சம் தனது சொந்தப்பணத்தில் 5    லட்சம் செலவு செய்திருப்பார்....புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பது தவறே ஆனாலும் , தனக்காக ஒன்றும் அவர் அவ்விடத்தை ஆக்கிரமித்து விடவில்லை...

இன்றும் கலங்கல் கலைஞர் நகர் அவர் பேர் சொல்லிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் 300 குடும்பங்கள் அங்கே சொந்தவீடு கட்டி வாழ்கின்றன.


காலப்போக்கில் , பெயர் மட்டுமே கலைஞர் நகராக இருந்தாலும் பலகட்சிக்கொடிகள் பட்டொளி வீசிப்பறந்தது கிளைக்கதை.....

ஒருமுறை 2000த்தின் துவக்கம் , திருநெல்வேலியின் 'பரணி' ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , அருகிலிருந்த மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தார் திரு.எஸ்.எஸ். பொன்முடி , இரண்டொருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தேன்... எழுந்து வந்து அருகில் உட்கார்ந்தார் , தம்பி , என்ன நம்ம ஊருக்காரரா என்றார்.

ஆமாங்கண்ணா...கலங்கல் என்று சொன்னதும் விழி விரிய நிறையப் பேசினார்.... அப்போது அவர் சொன்ன சேதி இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.


ஒருமுறை , 1996 எலக்சன் என்று நினைக்கிறேன். கலைஞர் நகர் வீடுகளுக்கு பட்டா எடுத்துக்கொடுக்க இயலவில்லை என்று  சொல்லி , என்ன  கலைஞர் நகருக்குள் நுழைய விடவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார்.... ஒரு சிறிய நிகழ்வை அதிலும் ஒரு அரசியல்வாதி நினைவில் வைத்து வருத்தப்பட முடியுமா என்று அதிர்ந்துபோனேன்.....அதிலிருந்து கலைஞர் நகர் பகுதிக்கு சாகும்வரை வரப்போவதில்லை  என்று முடிவெடுத்தாராம்... ஆம், அம்முடிவை அவர் சாகும் வரைக்கும் அப்பகுதிக்கு வராமலிருந்து நிறைவேற்றியே விட்டார்.

ஆம், மக்களால் மதிக்கப்பட்ட , மக்களுக்காகவே இறுதிவரை உழைத்த திரு. எஸ்.எஸ்.பொன்முடி அவர்கள் நேற்றுக்காலை மறைந்துவிட்டாராம்... ஊரில் விசாரித்தேன் , ஒவ்வொருவர் குரலிலும் மெல்லியதாய் இழையோடிய  சோகம்..  ஊரே கொள்ளமுடியாத கூட்டமாம். நேத்து பூராம் பஸ்ஸே வரல.....அவ்ளோ பேராம்....திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலேயே போக்குவரத்து நின்று போகும் அளவுக்கு கூட்டமாம் என்று தன்னையறியாத பெருமித உணர்வுடன் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...

காலம் தமது சமகாலத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களை கவுரவப்படுத்த தவறினாலும் , அவர்களது மறைவிலாவது கவுரவப்படுத்துகிறதே என்ற கனத்த மனத்துடன் இப்பதிவை முடிக்கிறேன்..



மனிதருள் மாணிக்கம் ' திரு.எஸ்.எஸ். பொன்முடி' அவர்களுக்கு என் இதய அஞ்சலி...



வாழ்வாங்கு வாழ்க அவர்தம் புகழ்...!!!

Comments

அதிர்ந்து பேச மாட்டார். அரவணைத்துச் செல்வார். இல்லை என்றால் இல்லை என்பார். இருக்கிறது என்றால் இருக்கிறதென்பார். தெரியாது என்றால் தெரியாது என்பார். ஆனால், இப்படி அழ வைத்து விட்டுச் செல்வார் என எவரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அன்னாருக்கு மலர் வணக்கம்!!
Mathibala said…
வணக்கம் பழமைபேசி அண்ணை. நீங்கள் சொன்னது அத்துனையும் உண்மை. நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு... மிகுந்த நாட்களுக்குப்பிறகு உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள...