ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?
இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும் கிடைத்தது.
தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம் வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.
புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்குமானால் அது திமுக தான். இல்லையென்று சொல்ல யாரிடமும் தரவுகள் கிடையாது. இருக்கவும் முடியாது.
தோழர் பத்மநாபா படுகொலையில் ஆரம்பித்து, இந்திய அமைதிப்படை வெளியேற்றம், ஆட்சிக்கலைப்பு, ராஜிவ் காந்தி படுகொலை, திமுகவினரை குறிவைத்து நடந்த வன்முறைகள், செங்குத்தான பிளவு என்று வர்ணிக்கப்பட்ட வைகோவின் பிரிவு என்று 90களின் முற்பகுதியில் நடந்த நிகழ்வுகளால் திராவிட முன்னேற்றக்கழகம் இழந்தது தான் எத்தனை எத்தனை.
1991ல் ஆட்சிக்கலைப்பு என்பது சாதாரணமல்ல, மூன்று தேர்தல்களில் அடைந்த தோல்விக்குப்பின்னர் கிடைத்த வெற்றி.! உண்மையில் தீவிர பகுத்தறிவுப்பாதையிலிருந்து கழகம் விலகுவதற்குக்காரணம் அந்த ஆட்சிக்கலைப்பு, அதனால் இழப்பு திமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் தான்.
ஒருமுறையாவது கலைஞர் இதை சுட்டிக்காட்டி இருப்பாரா?
ஆட்சிக்கணிப்பிற்குப்பின் பரவலாக திமுகதான் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பு இருந்தபோது
1991ல் நடந்த ராஜிவ் கொலையினால் தான் ஜெயலலிதா என்னும் பெரும் சக்தி, அடுத்த 25 வருடங்களுக்கு தமிழகத்தை தவறான பாதையில் எடுத்துச்செல்லப்போகிற ஒரு பார்ப்பனீய சக்தி உருவானது. அதனால் தமிழகம் இழந்ததுதான் எத்தனை எத்தனை.
ஒருமுறையாவது கலைஞர் இதை வெளிப்படையாக சுட்டிக்காட்டி இருப்பாரா?
வைகோவின் வெளியேற்றம் எல்லோரும் அறிந்ததே , அதற்கும் முழுமுதற்காரணம் ஈழமும் அதுசார்ந்த நிகழ்வுகளும் தானே, இதைவிட கழகத்தை நேரடியாக பாதித்த நிகழ்வொன்று சமீபத்தில் இல்லையே. மு கண்ணப்பனோ, செஞ்சி ராமச்சந்திரனோ, வ கணேசனோ கழகத்தை விட்டு வெளியேறுவார்களென்று நினைக்கமுடியுமா? அதற்குப்பிறகும் கழகம் வெற்றிக்கொடி கட்டியதென்பது கிளைக்கதை.
இத்தனை இழப்புகளுக்குப்பின்னும் ஒருநாளேனும் திமுக புலிகள் மீது தவறான விமர்சனங்களை வைத்திருக்குமா? கலைஞரோ திமுக தலைமையோ விடுதலைப்புலிகளை வெளிப்படையாக விமர்சித்திருப்பார்களா?
இத்தனைக்குப்பிறகும் தமிழ்ச்செல்வன் மறைவிற்கு கலைஞர் இரங்கற்பா வடித்தாரே...... இதற்குப்பிறகுமா நாம் புலிகளை கலைஞர் வெறுத்தவரில்லை என்பதற்கு அத்தாட்சி தேடவேண்டும்??
யாரோ சில விசிலடிச்சான் குஞ்சுகள், பருவமடையா பச்சிளம் குழந்தைகள் , கொள்கையென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் பொடியன்கள் கழகத்தின் மீது சேற்றை வாரி இரைக்கிறார்கள் என்பதற்காக போராளிகள் மீது நாம் விமர்சனம் வைப்பது முறையா?
அவர்கள் அறியாமையிலிருக்கிறார்கள், அவர்களுக்கு வரலாறு தெரியாது, 1991ல் திமுகவினர் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று துரத்தித் துரத்தி தாக்கப்பட்ட வரலாறு அறியாதவர்கள். திராவிட இயக்கம் தான் புலிகளுக்கான ஆதரவுத்தளத்தை தமிழகத்தில் கட்டமைத்தது என்ற சிறு உண்மைகூட அறியாதவர்கள். சந்தேகமிருந்தால் தோழர் கொளத்தூர் மணியை கேளுங்கள், பிரபாகரனையும் நேரே அறிந்தவர் அவர்.
அறியாமை இருளகற்றத்தானே பகுத்தறிவுப்பகலவன் பாடுபட்டார், சீமானின் பின் செல்லும் பலரும் கூட அறியாமையில் தான் செல்கிறார்கள். அவர்களையும் மீட்கவேண்டிய பெருங்கடன் திமுகவுக்குத்தானே இருக்கிறது. அதைவிடுத்து போராளிகளை விமர்சித்து என்ன சாதிக்கப்போகிறோம்? யாரை வெற்றிகொள்ளப்போகிறோம். சிந்தித்து தெளிவோம்.
எதிரிகள், இறுதிவரை தம் மக்களுக்காய் சண்டையிட்டு மடிந்த போராளிகள் அல்லர், கூலிக்கு மாரடிக்கும் திடீர் ஈழ மீட்பர்கள் தான். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற பார்ப்பனீய வஞ்சகத்தை தமிழகத்தில் பரப்பியவர்கள் தான்.
தெளிவோம், சரியான பாதையில் செல்வோம்!
Comments