Skip to main content

எனக்குப் பிறகு ஸ்டாலின் : கருணாநிதி


சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அதற்குப் பிறகு ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2000க்கு மேற்பட்ட பா.ம.க. வினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த போது கிருணாநிதி ஆற்றிய உரையில், " இன்றைக்கு ஒரு கட்சியின் அமைப்பிலே இருந்து விடுபட்டு இங்கே வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிற நேரத்தில் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறத் தேவையில்லை. அந்த அமைப்பைக் குற்றஞ்சாட்டத் தேவையில்லை. குற்றம் இருந்த காரணத்தால்தான், குறைகள் இருந்த காரணத்தால் தான் அங்கிருந்து பிரிந்து வந்து திராவிட முன்னேற்றக் கழகத்திலே இணைந்திருக்கிறோம் என்று முற்றுப்புள்ளி வைத்த பிறகு, அதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை.

உங்களையெல்லாம் பிரிந்திருக்கின்ற அந்தத் தலைமை, ஒரு காலத்தில் எனக்கு மிக மிக வேண்டிய, நட்பு கொண்ட, கொள்கையுடைய தலைமையாகத் தான் இருந்தது. ஆனால் நீங்கள் பத்திரிகைகளைப் பார்த்திருப்பீர்கள். கூட்டங்களிலே கேட்டிருப்பீர்கள். என்றைக்காவது ஒரு நாள், அந்தத் தலைமையைப் பற்றி நான் அவதுhறாகவோ, அல்லது விமர்சனம் செய்தோ பேசியதாகக் காட்ட முடியுமா என்றால் முடியவே முடியாது. ஆனால் வீணாக என்னை வம்புக்கு இழுத்து நான் பதில் பேசாவிட்டாலும் கூட என்னை தரக் குறைவாகத் தாக்கி உங்களையெல்லாம் இங்கே வருவதற்கு எளிதாக வழி செய்து கொடுத்த அந்த நண்பருக்கு - உங்களுடைய முன்னாள் தலைவருக்கு - நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்.

இந்தச் சமுதாயத்திலே தாழ்த்தப்பட்டிருந்த, ஒதுக்கப்பட்டிருந்த, ஓரம் கட்டப்பட்டிருந்த ஏழையெளிய மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்குப் பயன்படுகின்ற பணிகளை செய்வதையே கடமையாகக் கொண்டு, அதிலே வெற்றி பெற்றுள்ள கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம். இங்கே நம்முடைய சாமுவேல் செல்லப்பாண்டியன் பேசும்போது, அம்பேத்கர் நினைவாக தமிழகத்தில் என்னென்ன செய்தோம் என்பதையெல்லாம் குறிப்பிட்டார்ர்.

அம்பேத்கர் மணி மண்டபம், அம்பேத்கர் பெயரால் ஒரு சட்டக் கல்லூரியை அமைத்தது, திராவிட முன்னேற்றக்
கழக ஆட்சி தான். அது மாத்திரமல்ல; மராட்டியத்திலே பிறந்தவர் அம்பேத்கர். மாராட்டியத்தில் அம்பேத்கர் பெயரால் ஒரு பல்கலைக்கழகத்தைத் துவக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. அது குறித்து அறிந்து, உடனடியாக அம்பேத்கர் பல்கலையைத் துவக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தும், திமுக தொண்டர்கள் தந்திகளை அனுப்பியும் முயற்சி எடுத்ததன் அடிப்படையில், இப்போது மராட்டியத்திலே அம்பேத்கர் பெயரால் பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறது என்றால், அது நாம் இங்கே எடுத்த முயற்சி தான் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


இதுமட்டும் அல்ல, நான் உங்கள் இனத்தைச் சேர்ந்த - உங்கள், எங்கள் என்று நான் பிரித்துப் பேச விரும்பவில்லை - நம்முடைய இனத்தைச் சேர்ந்த காந்தி என்ற பெண்ணையே என்னுடைய மகன் மு.க. அழகிரிக்கு மனைவியாக கொண்டு வந்துள்ளேன்.


இப்படி சமுதாயத்திலே கலப்பு ஏற்பட்டு, எல்லோரும் மனிதர்கள் அவர் இன்ன சாதி, இவர் இன்ன சாதி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், நாடு வாழாது, நம்முடைய நலிவுகள் தீராது என்பதற்காகத் தான் சாதி மறுப்புத் திருமணங்கள் இன்றைக்கு நடைபெறுகின்றன. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் சமத்துவத்திலே ஒரு நம்பிக்கையையும் உறுதிப் பாட்டையும்
ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு ஒத்துழைப்பு காட்டிய அறிவுலக மேதை அம்பேத்கர் அவர்களுடைய அந்தச் செயல்பாடுகளையும் போற்றிப் பாதுகாத்து நிற்பது தான் திராவிட முன்னேற்றக்
கழகம் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தச் சமுதாய மேன்மைக்காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன்.

அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில் தான் - இங்கே அமர்ந்திருக்கின்ற ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. நாம் ஓரினம், தமிழ் இனம், திராவிட இனம். நம்முடைய மொழி, தமிழ் மொழி. நாம் காப்பாற்ற வேண்டிய மொழி, பயில வேண்டிய மொழி, பாதுகாக்க வேண்டிய மொழி தமிழ் மொழி. அந்த மொழியையும் காத்து, இனத்தையும் காத்து எதுவரினும் அதைப் பற்றி கவலைப் படாமல் எந்தத் தியாகத்திற்கும் தயார் என்று நம்மை நாம் அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கத்திலே இன்று நீங்கள் உங்களை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கும், எங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்ற இந்தத் தொடர்பு காலத்திற்கும் அழியாத தொடர்பாக விளங்கட்டும் என்று கூறி விடைபெறுகிறேன் என்று கூறினார்.

நன்றி : தினமணி


தொடர்புபட்ட எனது முந்தைய கட்டுரை:

திமுகவின் அடுத்த தலைமை 

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்....

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...