முன்பு மதிபாலா பக்கங்கள் என்ற தலைப்பில் இன்னொரு வலைப்பூவில் பெரும்பாலும் அரசியலைப் பற்றி அலசிக்கொண்டிருந்தேன்......சலிப்புத் தட்டியதாலும் , நேரமின்மையாலும் வலைப்பூக்களிலிருந்து அனேகமாக ஒரு வருடம் விலகியே இருந்தேன்....
தற்போதைக்கு , உணர்வுகளுக்கு வடிகாலென எப்போதாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன்.... இவ்வலைப்பூவை "எழுதியதும் , டைப்பியதுமென பெயரிட்டு மீள்கிறேன்...!
இனி அவ்வப்போது சந்திப்போம்…நன்றி.!
தற்போதைக்கு , உணர்வுகளுக்கு வடிகாலென எப்போதாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன்.... இவ்வலைப்பூவை "எழுதியதும் , டைப்பியதுமென பெயரிட்டு மீள்கிறேன்...!
இனி அவ்வப்போது சந்திப்போம்…நன்றி.!
***
வாழ்வில் நாம் பல பேரைச் சந்திக்கிறோம். சிலரை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறோம் , பலரை எப்போதாவது….
வாழ்வின் சில நொடிகள் மட்டுமே வந்து போகும் பலரைக் கூட எப்போதாவது பார்த்த நினைப்புத் தோன்றும் எனக்கு….மற்றபடி இந்த அவசர உலகில் காலம் அனைத்தையும் கடந்து போகச் செய்கிறது….நாம் கடந்து போன முகங்களையும் தான்..
இது நம்மைத் தூக்கி வளர்த்த ஆத்தாவாக இருக்கட்டும் , இல்லை ஆயாவாக இருக்கட்டும்…சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்காரியிலிருந்து , காரிய நிமித்தமாக வெகு தொலைவானதொரு ஊரில் பார்த்தவர்களாக இருக்கட்டும்…
பார்த்தவர்களென்றில்லை ,கேள்விப்பட்டவர்களும் , வாசித்தவர்களும் அதில் அடக்கம்.!
அவர்களில் ஒரு சிலரை இம்மீள்தல் பதிவில் நினைவு படுத்திக்கொள்கிறேன்.
***
கண்ணாள்…
குறிப்பு
இப்போது அவர் என்று நான் அவரை அழைத்தாலும் , அப்போதெல்லாம் , வா – போ என்றுதான் அழைப்பதுண்டு. கொங்குச்சீமையில் “வலையர்”களுக்கான மதிப்பு அவ்வளவுதான் “இருந்தது”.
“இருந்தது” என்று சொல்லும் போது அது இறந்த காலம் ஆகிவிடுகிறது…இப்போதும் இருக்கிறதானபடியால் “இருக்கிறது” என்றே சொல்ல வேண்டும். ஆகவே கொங்குச்சீமையில் “வலையர்”களுக்கான மதிப்பு அவ்வளவுதான் “இருக்கிறது”.
எப்போது அழைத்தாலும் சலிக்காமல் வந்து எல்லா வேலையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்..எப்போது நான் அம்மாவிடம் அடம் பிடித்து பணத்திற்கு ( முட்டாய் வாங்கத்தான்…..!!) அழுதாலும் , அம்மாவிற்குத் தெரியாமல் காசு கொடுப்பார்….அதனால் எனக்கு அவர் மீது தனிப்பிரியமுண்டு.
கடந்த முறை எனது திருமணத்திற்கு அழைக்கச் சென்ற போது , பக்கவாத நோயால் படுத்திருந்தார்…
உடல் மெலிந்து ,
சாயம் போன நூல்சீலை கட்டி ,
அழுக்குப் போர்வையொன்றில் படுத்திருந்தார்.
இலேசான வெளிச்சம் குடிசையின் தடுக்குகளில் இருக்கும் ஓட்டை வழியே பரவியிருந்தது.
கண்ணீர் மல்க “நல்லா இருக்கீங்களா? “ என்றார்….
“நல்லா இருக்கேங்க….நீங்க எப்படி இருக்கீங்க ? ” என்ற என் குரலுக்கு இலேசான புன்முறுவலித்தார்….ஆனால் அதிலிருந்த வேதனையையும் , காரணத்தையும் என்னால் உணர முடிந்தது….
“ இருக்கேன் சாமி…புள்ள குட்டீக பொழப்ப பாக்க டவுனுக்குப் போயிட்டாங்க…இங்க நா மட்டும் தனியா கெடந்து அல்லாடுறேன்…எப்பவாச்சும் எதுத்தூட்டு “ சுப்பாத்தா “ சோறு கொண்டு வந்து போடும்...உங்களுக்கு கலர் வாங்கிக்கொடுக்க கூட ஆளில்லாமப் போச்சு இங்க…”
தனது சுருக்குப் பையில் முடிந்துவைத்திருந்த ஐந்து ருபாய் நாணய மிரண்டை எடுத்துக்கொடுத்து ,
“உங்க கலியாணத்துக்குத் தான் என்னால சமையல் வேலை செய்ய முடியலை போங்க….உங்க அக்கா சீரு மொதக்கொண்டு இந்தக் கையாலதான் சோறாக்கிப்போட்டேன்……உங்க கல்யாணத்துக்கு என்னால வரக்கூடிய முடியாது…..இதான் என் கையில இருக்கு , மறுக்காம வெச்சுக்கங்கங்க இராசா….” என்றார்..
மறுக்க முடியவில்லை…
வாங்கிக்கொண்டேன்………..
கையிலிருந்த சில ரூபாய்த்தாள்களை அவரிடம் திணித்துவிட்டு வண்டி ஏறினேன் கனத்த இதயத்துடன்....
காலம் தான் மனிதர்களை எப்படி மாற்றிவிடுகிறது பாருங்கள்….
Comments