Skip to main content

தொழில்.

காணக் கிடைக்காத தேசம் ஒன்று போய் , இங்கே காணக்கிடைக்காத பொருளையொன்றை வாங்கி , உள்ளூரில் விற்றுக்காசு பார்க்க உத்தேசித்திருந்தான் கவி.

காணக்கிடைக்காத தேசமெது.?  அங்கே உள்ளூரில் போனியாகும் உயர்தர பொருளெது? அப்பொருளை அங்கே சென்று வாங்கி வர ஆகும் செலவையும் , அதன் மீது வைத்துவிற்கும் குறைந்தபட்ச லாபத்தையும் மீறி அந்தப்பொருள் விலை போகுமா? போனால் லாபம் உண்டு.
விலைபோகாவிட்டால் வாங்கிய விலைக்கேனும் விற்று நஷ்டமில்லாமல் தப்பித்துக்கொள்ளலாம். அட அடக்கவிலைக்கேனும் யாரும் வாங்கிட மறுத்தால் என்ன செய்ய? நஷ்டம் தான்.  

அதில் குறைந்தபட்ச நஷ்டத்தை நாம் எப்படி சமாளிப்பது? இருக்கிற பணத்துக்கெல்லாம் பொருளை வாங்கி விட்டால் நஷ்டம் ஏற்படும்போது “புவ்வா”விற்கு என்ன செய்வது? குழம்பிப் போனான் கவி.

சரி , தெரிந்த நண்பர்களிடம் கேட்கலாமென்று முடிவு செய்தான்.
ஒருத்தன் சொன்னான்.

“ மாப்ளே , இன்னிக்கு லெவல்ல தனியா தொழில் தொடங்கி ஆறே மாசத்துல அம்பானி ஆனவன் ஆயிரக்கணக்கில…..தெம்பா செய்டா”

இன்னொருத்தன் சொன்னான்….

” டேய் ..இன்னிக்கெல்லாம் , வேலைக்கு போய் சோத்துக்கு ரெடி பண்ணிக்கிட்டு பார்ட்-டைமா ஏதாச்சும் கடை கிடை வெக்கலாம்..அத வுட்டுட்டு வேலையை விட்டு நின்னு புதுசா தொழில் பண்ணுறேன்றியே? இதெல்லாம் நடக்குற காரியமா? “

இரண்டையும் கேட்டு குழம்பிப் போய் இன்னொருவனிடமும் கேட்டான் கவி.

“ டேய் , கடை வெக்குறது அது இதுன்னு எறங்கலாமா? தேவையில்லாம டென்ஷன்… பேசாம வேலையப் பாரு…பி.எப் புடிக்குற விகிதத்தை அதிகம் பண்ணு….. மியுச்சுவல் பண்ட் லயோ , யூ லிப்லயோ போடு…சும்மா அள்ளிரலாம். வேணும்னா சொல்லு , என் ப்ரண்ட் தான் ஏஜெண்டா இருக்கான்.சூப்பரான பண்ட்ஸ் புடிச்சி தருவான். அஞ்சே வருசத்தில பல கோடீஸ்வரன்களை உருவாக்கிட்டான்னா பாரேன்”

அட அஞ்சு வருசமா , ஏஜெண்டா இருக்குற உம் ப்ரெண்ட் ஏன் கோடிஸ்வரன் ஆகாம இன்னும் பெயிண்டு போன டிவிஎஸ் லே வாறான்னு கேட்கத்துடிச்சாலும் அடக்கிகிட்டான் “கவி”.

இறுதியாக இன்னொரு ஆத்ம ஸ்நேகிதனிடம் விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தான். அவனும் அவன் நண்பனும் , தெருமுக்கு டீக்கடையில் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.

“ கவி…நல்ல யோசனைதான். ஆனா , அதுல நெறையா சிக்கல் இருக்கு…..கைல இருக்கற காசையெல்லாம் பொருளை வாங்க முடக்கிட்டா   நீ என்ன பண்ணுவே. அதனால உன் வருமானத்தை முதல்ல பெருக்கிக்க”

“அதுக்காகத்தான் தொழில் பண்ணனும் டா” என்றான் கவி.

“காசே இல்லாம தொழில் பண்ண ஆயிரம் வழி இருக்கு மாப்ளே. என்னப் பாரு. 2002 ல ஒரு ஸ்டார்ட்டர் கிட் ஐயாயிரத்துச் சொச்சம் ரூவாய்க்கு வாங்கினதோட செரி…இன்னிக்கு நம்ம நெட்வொர்க் எங்கியோ போய்டுச்சி. பாரு ,நான் கால் ஆட்டிக்கிட்டே உக்கார்ந்துருக்கேன். எனக்காக எவனோ வேலை பாக்குறான். மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் புரிஞ்சவனுக்கு வரம் டா , புரியாதவனுக்கு தான் தப்பா தெரியும்.”

கொஞ்சமாக கவிக்கும் ஆசை வர ஆரம்பித்தது. ஆர்வத்தை புரிந்து கொண்ட ஆத்ம ஸ்நேகிதன் “ஆழ”மாக உழ ஆரம்பித்தான்.

“ உன்னைப் போல ஆக்டிவ் ஆன மெம்பர் ஒருத்தன் கண்டிப்பா நம்ம நெட்வொர்க்குக்கு வேணும் டா. நீ என்ன சொல்ற…..வாரத்துல ஒரு அரை மணி நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணினா போதும்.. பாரு , என் நெட்வொர்க்ல நாலாவதா இருக்க ஒருத்தன் மாசம் இருவத்தஞ்சாயிரம் லம்ப்பா சம்பாரிக்கிறான்.”

“சரிடா , யோசிக்கிறேன்…” என்றான் கவி.

கிளம்பும் போது “ டீக்காசு “ கொடுக்க முயன்ற கவியை  தடுத்த நண்பன் ,
“அண்ணே…அக்கவுண்ட்ல எழுதிக்கிங்க"…..என்றான்.

இவர்களின் அபார முதலீட்டு  ஆலோசனையை சற்றும் பொருட்படுத்தாத “கல்லாக்காரன் “சொன்னான்.

“ அண்ணே  , முதலாளி அக்கவுண்ட்ல ஏதும் கொடுக்க வேணாம்னுட்டார்ண்ணே. ஏற்கெனவே இருக்குற நூத்து முப்பது ரூவா” பாக்கியை செட்டில் செஞ்ச பிறகு பாத்துக்கலாம்னுட்டார். “
சத்தமில்லாமல் டீக்காசை கொடுத்துவிட்டு மனதுக்குள் “கல்லாக்” காரனை பாராட்டி விட்டு நூலிழையில் “எஸ்கேப்” ஆனான் கவி.

நண்பர்களிடம் விசாரித்து அவன் தெளிந்தது ஒரே ஒரு விடயம் மட்டுமே….அது “ பொத்தாம் பொதுவாக யாரிடமும் ஆலோசனை கேட்பது   குழப்பத்தையே” அதிகரிக்கும் என்பதுதான் அது.

தைரியமாக முடிவெடுத்து , சரி,தவறுகளை எடை போட்டு வைத்திருந்த காசில் ஒருபகுதியை மட்டுமே முதலிட்டு தொழிலை ஆரம்பித்தான். நாளடைவில் பல்கிப் பெருகியது வியாபாரம். தொழிலதிபர் ஆனான்.

என்ன , இன்னமும் கூட ஜெயித்த அவன் கதையை உதாரணித்துக்காட்ட நண்பர்கள் தான் தயாரில்லை. மியுச்சுவல் ப்ண்ட் யோசனைகளையும் , மல்ட்டிலெவல் யோசனைகளுமே இன்னமும் பெருகியிருந்தன.

Comments

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

இந்தியாவும் சீனாவும் - ஒரு ஒப்பீடு..!

நிறைய பத்திரிக்கைகளும் , பொருளாதார வல்லுநர்களும் அடிக்கடி இப்படிச் சொல்வதுண்டு. இந்த நூற்றாண்டு இந்தியா மற்றும் சீனாவின் நூற்றாண்டு என்று. வருங்காலத்தில் இந்தியாவும் , சீனாவுமே உலக வல்லரசுகளாகப் போகின்றன என்று. நிலைமை என்ன? இந்தியாவிற்கோ , சீனாவிற்கோ அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கான முதல் படி இந்தியாவும் சீனாவும் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்பதேயாகும். ஆய்வுகளை அரசியல், பொருளாதார , இராணுவ , இராஜதந்திர , அண்டை நாடுகளுடனேயான உறவுகளினூடாக அணுகலாம். பொருளாதார ஒப்பீட்டில் இந்தியாவும் , சீனாவும் எப்படி இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்ப்போம். மற்றைய இராணுவ , இராஜதந்திர உறவுகளை பிரிதொரு சமயம் பார்க்கலாம். உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட இருநாடுகளும் உலகப்பொருளாதாரத்தில் பெருமளவு பங்கு வகிக்கின்றமை தவிர்க்க இயலாததே.  இந்தியாவின் தோராய ஜி.டி.பி ( GROSS DOMESTIC PRODUCT) மதிப்பு ( ஜிடிபி என்பது ஒட்டுமொத்த நாட்டின் உற்பத்தி மதிப்பு) 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். ( எத்துணை சைபர் டிரில்லியனுக்கு என்ற ஆய்வை கொஞ்சம் அப்புறமா பாக்கலாம் சார். ) , அதே ச...