Skip to main content

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே.

எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு.

பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர்.

அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார்.

கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவர்களின் முன்முயற்சியால் அந்த ஜல்லிக்குழி மேடாக்கப்பட்டு 'கலைஞர் நகர்' ஆக்கப்பட்டது. அதற்கு மட்டும் திரு. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் குறைந்தபட்சம் தனது சொந்தப்பணத்தில் 5    லட்சம் செலவு செய்திருப்பார்....புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பது தவறே ஆனாலும் , தனக்காக ஒன்றும் அவர் அவ்விடத்தை ஆக்கிரமித்து விடவில்லை...

இன்றும் கலங்கல் கலைஞர் நகர் அவர் பேர் சொல்லிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் 300 குடும்பங்கள் அங்கே சொந்தவீடு கட்டி வாழ்கின்றன.


காலப்போக்கில் , பெயர் மட்டுமே கலைஞர் நகராக இருந்தாலும் பலகட்சிக்கொடிகள் பட்டொளி வீசிப்பறந்தது கிளைக்கதை.....

ஒருமுறை 2000த்தின் துவக்கம் , திருநெல்வேலியின் 'பரணி' ஹோட்டலில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , அருகிலிருந்த மேசையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தார் திரு.எஸ்.எஸ். பொன்முடி , இரண்டொருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தேன்... எழுந்து வந்து அருகில் உட்கார்ந்தார் , தம்பி , என்ன நம்ம ஊருக்காரரா என்றார்.

ஆமாங்கண்ணா...கலங்கல் என்று சொன்னதும் விழி விரிய நிறையப் பேசினார்.... அப்போது அவர் சொன்ன சேதி இன்னும் என் நெஞ்சில் நிற்கிறது.


ஒருமுறை , 1996 எலக்சன் என்று நினைக்கிறேன். கலைஞர் நகர் வீடுகளுக்கு பட்டா எடுத்துக்கொடுக்க இயலவில்லை என்று  சொல்லி , என்ன  கலைஞர் நகருக்குள் நுழைய விடவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார்.... ஒரு சிறிய நிகழ்வை அதிலும் ஒரு அரசியல்வாதி நினைவில் வைத்து வருத்தப்பட முடியுமா என்று அதிர்ந்துபோனேன்.....அதிலிருந்து கலைஞர் நகர் பகுதிக்கு சாகும்வரை வரப்போவதில்லை  என்று முடிவெடுத்தாராம்... ஆம், அம்முடிவை அவர் சாகும் வரைக்கும் அப்பகுதிக்கு வராமலிருந்து நிறைவேற்றியே விட்டார்.

ஆம், மக்களால் மதிக்கப்பட்ட , மக்களுக்காகவே இறுதிவரை உழைத்த திரு. எஸ்.எஸ்.பொன்முடி அவர்கள் நேற்றுக்காலை மறைந்துவிட்டாராம்... ஊரில் விசாரித்தேன் , ஒவ்வொருவர் குரலிலும் மெல்லியதாய் இழையோடிய  சோகம்..  ஊரே கொள்ளமுடியாத கூட்டமாம். நேத்து பூராம் பஸ்ஸே வரல.....அவ்ளோ பேராம்....திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலேயே போக்குவரத்து நின்று போகும் அளவுக்கு கூட்டமாம் என்று தன்னையறியாத பெருமித உணர்வுடன் தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...

காலம் தமது சமகாலத்தில் வாழ்ந்து வரும் மனிதர்களை கவுரவப்படுத்த தவறினாலும் , அவர்களது மறைவிலாவது கவுரவப்படுத்துகிறதே என்ற கனத்த மனத்துடன் இப்பதிவை முடிக்கிறேன்..



மனிதருள் மாணிக்கம் ' திரு.எஸ்.எஸ். பொன்முடி' அவர்களுக்கு என் இதய அஞ்சலி...



வாழ்வாங்கு வாழ்க அவர்தம் புகழ்...!!!

Comments

அதிர்ந்து பேச மாட்டார். அரவணைத்துச் செல்வார். இல்லை என்றால் இல்லை என்பார். இருக்கிறது என்றால் இருக்கிறதென்பார். தெரியாது என்றால் தெரியாது என்பார். ஆனால், இப்படி அழ வைத்து விட்டுச் செல்வார் என எவரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அன்னாருக்கு மலர் வணக்கம்!!
Mathibala said…
வணக்கம் பழமைபேசி அண்ணை. நீங்கள் சொன்னது அத்துனையும் உண்மை. நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு... மிகுந்த நாட்களுக்குப்பிறகு உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

Popular posts from this blog

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...

ஒற்றையாட்சி முறையா, பிரிவினைக்கான அடித்தளமா?

இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்.. நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ இந்தியாவில் பல்லினங்கள் உண்டு, பல மொழிகள் உண்டு , பல பழக்கவழக்கங்கள் உண்டு , இவற்றை ஏற்றுக்கொண்டு , சகிப்புத்தன்மையோடு எல்லோரும் ஓரினமாய் வாழ்வதே இந்தியா வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறை. அதைவிடுத்து , ஒற்றையாட்சியை நிறுவுவோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் இந்தியா எனும் நாடு இருக்குமா என்பதே கேள்விக்குறி!!! குறிப்பாக , வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் " நீட்" தேர்வு... எனக்கென்று என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசும் , என்னால், என் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களெல்லாரும் சேர்ந்து நீட் எமக்கு வேண்டாம் என்று தீர்மானம் செய்கிற போது அதை வலிந்து எம் மேல் திணிக்க இந்திய நடுவண் அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியெழுப்புவதில் தவறென்ன இருக்கிறது? பல பத்து சின்னஞ்சிறு நாடுகளாய் ஐரோப்பியாவில் பரவிக்கிடப்பதற்கு பாரிய காரணமென்ன? மொழி மற்றும் இனங்களால் அவர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள்... அதனால் தான் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கேற்ப மொழிவாரி மாநிலங்களை அமை...