Skip to main content

வளவு.

 அது தேர்தல் நேரம்..

சட்டசபைத்தேர்தலோ , நாடாளுமன்றத் தேர்தலோ அல்ல. உள்ளூராட்சித் தேர்தல். பொதுவாக , சட்டசபை,நாடாளுமன்றத் தேர்தலைவிட பரபரப்பானது உள்ளூராட்சித் தேர்தல். 

காரணம் , அச்சமயத்தில் தான் எப்போதுமே தேர்தலில் ஜெயிக்கும் நட்ராஜுக்கவுண்டரும் , தோத்துப்போகும் இன்னபலரும் உள்ளூர் அரசியல் தலைமைகளாக ஜொலிக்கும் சொற்ப காலம். 

டீக்கடைகள் கட்சிக்கலரற்ற வேட்டிகளுடன் திரியும் தொண்டர்களால் நிரம்பித்திளைக்கும்.... உருளைக்கிழங்கு போண்டாவொன்றையும் , ஒரு லைட் டீ ஒன்றையுமே அடித்துக்கொண்டு , இரவு நேர குவாட்டர் கோட்டாவுக்காக காத்திருக்கும் நட்ராஜுக் கவுண்டரின் தொண்டரடிப் பொடிகள் அடிக்கும் லோலாயும் , தப்புக்கொட்டலும் , மைக்கில் அதிரடியான பொங்கு தமிழ் வசனங்களைப் பொழிவதிலும் ஊருக்குள் திருவிழாவோ என்ற வண்ணம் ஜே.ஜே. என்று தான் காத்திருக்கும்..


எங்கள் "வளவு"ம் கூட அப்படித்தான்.......குடிசைகளாலும் , ஊரோரம் ஓடும் சாக்கடையை வீடாகக்கொண்ட ஈ , கொசு முதலான பறப்பனவைகளையும் , எங்களையும் ஒருங்கே கொண்ட எங்கள் "வளவு" என்று பெருமை கொள்ளலாம்.

என்ன ஒரே வித்தியாசம்.....

கொசுக்களுக்கும் , ஈக்களுக்கும் இங்கிங்கு போகலாம் , இங்கிங்கு போகக் கூடாது என்ற வரைமுறை  இல்லை...ஆனால் , எங்களுக்கு உண்டு. 

எங்களுக்கென தனியான "பீ"க்காடு , 

எங்களுக்கென தனியான "சேந்தி" கிணறு , 

எங்களுக்கென தனியான "இடு மற்றும் சுடு" காடு, 

எங்களுக்கென்றே தனியான அண்ணமார் கோயிலும் , மதுரை வீரன் கோயிலுமாக செல்வாக்காகவே வாழ்ந்தோம் , வாழ்கிறோம் நாங்கள். 

சாமியிலேயே சாதி பார்க்கும் , தனித்தமிழ் சமுகத்தில் பிறந்த எங்களுக்கென்ன குறை? 

அப்படியாகப் பட்ட எங்களிடம் கூட "குறை" இருப்பதாகக் கண்டுபிடித்து நட்ராஜுக்கவுண்டரின் அடிப்பொடிகள் அதை  நிவர்த்தி செய்வதாக அளந்து விட்டுக்கொண்டிருந்தார்கள்..

வளவில் இருக்கும் மண்சாலைகளை ( அதைச் சாலை என்று கூறுவதை விட 'சந்து' என்று கூறுவதே சரியான அணுகுமுறையாயிருக்கும்.) கான்கிரிட் சாலையாக மாற்றிப் போட்டுத்தருவார் "தலைவர்" என்றார்கள்..

"பீ"க்காடு போகும் வழி , சேறும் சகதியுமாக இருப்பதாகவும் , தலைவர் ஜெயித்தால் அதை தம் செலவிலேயே "செங்குட்டை" மண்ணெடுத்து சீர்படுத்தித்தருவார் என்றார்கள்.

சேந்தி கிணற்றில் கோடைகாலத்தில் தண்ணீர் இல்லாமல் போகும்படியால் , "வளவி"லேயே கைப்பம்பு போட்டுத்தர ஆவன செயவதாகவும் சொன்னார்கள்.

இன்னபல , இன்னபல வாக்குறுதிகள்...பெருசுகளைக் கையில் போட்டுக்கொண்ட எங்க "வளவின் " அரசியல் ஆலோசகர் " ராமனொ" நட்ராசுக்கவுண்டரின் அருமைபெருமைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்.

இடையில் புகுந்த ஒரு இளந்தாரி " போன தரம் எலெக்சன்லே செயிச்சவுடனே கவுண்டரு " பம்புசெட்டு போட்டுத்தாரேன்னார் , ஆனா போடலையே " என்று சவுண்டு விட்டார்...

"அட , பெரிய மனசங்களை அப்படிப்பேசக் கூடாது" என்றபடியே அந்த இளைஞனின் குரலை அடக்கிய ஒரு பெருசு "இராமனின் " கடைக்கண் பார்வைக்காக திரும்பினார்....

குவாட்டர் வினியோகம் ஆரம்பித்தது...எல்லோரும் "நட்ராசுக்கவுண்டரின் தயாள குணத்தைப் பாராட்டிக்கொண்டே கலைந்து போயினர். அந்தப் பெருசுக்கு மட்டும் இன்னொரு குவாட்டர் அதிகமாகக் கிடைத்தது....நாளைக்கும் சேர்த்து "போணி" பண்ணிய சந்தோசத்தில் உச்சிமகிழ்ந்து போனது "பெருசு".

எப்போதும் போல ஜெயித்தார் நட்ராஜிக்கவுண்டர்...

எப்போதும் போலவே "சேந்தி" கிணற்றில் தண்ணீர் வற்றிப் போனது.
எப்போதும் போலவே "பீ"க்காட்டுச் சாலை சாக்கடை நீரில் சகதியாகவே இருந்தது.

எங்கள் வளவின் பெருசுகளும் , எளசுகளும் , கூலிக்குப் போய் விட்டு வந்து சொந்தக்காசில் குடித்தார்கள். அதிலும் பலர் அடுத்த எலக்சன் எப்போ வரும் என்று காத்திருக்கவும் செய்தார்கள். 

எப்போதும் போல எங்கள் மதுரைவீரன் சாமியும் , அண்ணமார் சாமியும் தங்களின் மந்தகாசச் சிரிப்புடன் மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சுமார் 200 - 300 வருடங்களாக அவர்கள் அருள்பாலித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். எங்கள் "வளவு"ம் கூட சகல செல்வாக்குகளுடன் முன்னேறிக்கொண்டே தான் இருக்கிறது......


இப்படிக்கு 

ஒரு வளவுத் தமிழன்.

பின்குறிப்பு :-
- வளவு - என்பது கிராமங்களில் ஆதிதிராவிடர்களும் , தலித்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியே வாழ்கின்ற ஒர் இடம்.

Comments

யாசவி said…
நல்ல ஆழமான பார்வை....

எப்படி இருக்கீங்க?

இன்னமும் பாண்டுங்கில்தான் வாசமா?

உங்களுடைய தொடர்பு விவரங்கள் இல்லை.
ஒரு வழவுத்தோழன் said…
இதுவரை பல வழவு ஒட்டிய பதிவுகள் இருப்பினும் , அரசியலையும் கலந்து இன்றைய நிலையைச் சொன்னது அற்புதம்.
அன்பு நண்பர் யாசவி.

நன்றி , ஆம் பாண்டூங் தான்.

என் வாழ்வின் மகிழ்ச்சியான கணமொன்றில் என் கூட இருந்த உங்களை மறக்கவே இயலவில்லை.

தொடர்பு விவரங்கள் மின்னஞ்சலில் தருகிறேன். நன்றி.
இதுவரை பல வழவு ஒட்டிய பதிவுகள் இருப்பினும் , அரசியலையும் கலந்து இன்றைய நிலையைச் சொன்னது அற்புதம்/

நன்றி தோழர்.

Popular posts from this blog

இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் திரு.சீமான்?

இன்று சீமான் அதிமுக கூட்டணியில் இருந்து பிரச்சாரம் பண்ணப்போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது..ஏற்கெனவே ஒருமுறை செய்த பாரிய தவறொன்றை மற்றொருமுறை செய்யமாட்டார் என்றே நினைத்திருந்தேன்....இது உண்மையான செய்தியாய் இருந்தால் பேரிடிதான்..!!!! மாறாக உணர்வுள்ள இளைஞர்கள் தம் பின்னால் பேரெழுச்சியுடன் நாம் தமிழராய் எழும்போது.....அதைக்கொண்டுபோய் போய்ஸ்தோட்டத்திற்கு தாரைவார்த்துக்கொடுப்பதென்பது கனவிலும் சகிக்க முடியாத செயல்....!!  கருணாநிதிக்கு ஈழ அழிவிற்கு எவ்வளவுக்கெவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவிற்கு  சக பங்குள்ளவரே செயலலிதா... செயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? என்ன செய்தார்? 1.எதிர்கட்சியாக மாபெரும் போராட்டங்களை நடாத்தியிருக்க வேண்டும்...அழிவது நம்சொந்தங்களே என்று தெரிந்திருந்தும் வாய்மூடி மெளனியாகவே இருந்தார். 2. கருணாநிதியின் எதிர்ப்பரசியலைக் கைவிட்டு விட்டு முத்துக்குமார் முதற்கொண்டு  தமிழக இளைஞர்களின் எழுச்சியை உபயோகித்து இந்திய அரசை ஸ்தம்பிக்க முயற்சித்திருக்க வேண்டும்....அதைவிடுத்து கொடநாட்டில் பள்ளி கொண்டிருந்தார்... 3.  சிறிதேனும் உண்மையான அக்கறை அவருக்கு தமிழர்பா...

யார் நமக்கு எதிரி?

ஈழப்போராட்டம் பல படிநிலைகளைக்கொண்டது, தந்தை செல்வாவில் ஆரம்பித்து, பல்வேறு போராளிக்குழுக்களில் தொடங்கி புலிகளால் வலுப்பெற்றது. மற்ற போராளிக்குழுக்களிலிருந்து புலிகளின் கைகளுக்கு முழுதும் மாறியதெப்படி?  இந்தியப்பெருந்தலைவர் இந்திராகாந்தி அவர்கள் எல்லா போராளிக்குழுக்களையும் ஆராய்ந்து புலிகள் தான் எல்லோரிலும் வலுவானவர்களாகவும் , சரியான சிந்தனைப்போக்குடையவர்களாகவும் இருப்பதாக தீர்மானித்தார்கள். அதனால் விடுதலைப்புலிகளுக்கு கூடுதல் ஆயுத பலம் மட்டுமல்ல , தார்மீக ஆதரவுத்தளமும்  கிடைத்தது.  தமிழகத்தில் எம் ஜி ஆர் அவர்களுமே விடுதலைப்புலிகளை நம்பிய அளவிற்கு மற்ற குழுக்களை நம்பவில்லை. ஏன் கலைஞர் கூட சகோதர யுத்தம் வேண்டாம் வேண்டாமென தலையில் அடித்துக்கொண்டாரே தவிர ஒரு சந்தர்ப்பத்தில் கூட புலிகளை இடித்துரைத்தாரில்லை. தனது இறுதிக்காலம்  வரை சகோதர யுத்தத்தினால் தான் புலிகள் வீழ்ந்தார்களென்பதை உறுதியாக நம்பினார். அதற்காக புலிகளை வெறுத்தாரா என்றால் ஒருகணமும் வெளிப்படையாக அவர் சொன்னதில்லை.  புலிகளால் அவர்களது மிதமிந்திய ஹீரோயிசத்தால் அதிகம் இழந்த அரசியல் கட்சி ஒன்று உலகில் இருக்கும...

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச...