Skip to main content

அர்த்தமுள்ள மெளனம்!

அது ஒரு மார்கழி மாதம்….!

நடுங்கும் குளிரில் போட்டிருந்த ஸ்வெட்டரையும் மீறி தன் குழந்தைக்கு குளிருமோ என்ற கவலையிலேயே வாசலைப் பார்த்தவாறு இருந்தாள் அவள் ,

அவன் அப்போதுதான் இரண்டு ரவுண்ட் தாண்டியிருந்தான். “

போதுண்டா , நேத்தே வீட்ல பிரச்சினைன்னு சொன்னியே , இன்னிக்காவது நேரத்துல போடாஎன்றான் நண்பன்…“இன்னும் ஒரே ரவுண்டு’’ என்றபடியே ஊற்ற ஆரம்பித்திருந்தான் அவன்.

அதற்கு முந்தைய நாள் இரவு...

என்ன இப்படி குடிச்சிட்டு அர்த்த ராத்திரியில வர்றீங்க? இன்னிக்கு செக்கப் போகணும்னு சொல்லியிருந்தேனே?” என்றபடியே விசும்ப ஆரம்பித்திருந்தாள் அவள்….

ஆபிஸ்ல டென்சன் , சும்மா தொண தொண ன்னு பேசாம கொஞ்சம் சோத்த போடறியா?” சிடுசிடுத்தான் அவன்……

நான் டாக்டர்கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் பிக்ஸ் பண்ணியிருந்தேன் , நாளைக்கு போனா சத்தம் போடுவாங்க , என்ன இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க? “ அவள்.

நாளைக்கு நான் உன்னை கூப்பிட்டு போறேன்னு யார் சொன்னா? எனக்கு வேலை இருக்கு , நீ ஆட்டோல போய்ட்டு வாஉனக்கு சேவகம் பண்றதுக்கா ஆபிஸ்ல சம்பளம் கொடுக்கறாங்க…?”

இப்படியாக நீண்ட வாக்குவாதம் படுக்கையறை வரை தொடர்ந்ததுவிசும்பியபடியே இவளும் , போதை மயக்கத்தில் அவனும் தூங்கிப் போயிருந்தார்கள்

அடுத்த ரவுண்டும் ஆயிற்று. அவன் நண்பனின் வற்புறுத்தலால் நகர விருப்பமில்லாதவனாக நகர்ந்தான் அவன்.

நிறைமாதமாகையால் தெருமுனைக்கு போய் ஆட்டோ பிடிப்பதற்குள் மூச்சு வாங்கிவிடும். ஆனால் வீட்டுக்கருகில் ஆட்டோ அவ்வப்போதுதான் வரும். ரொம்ப நேரம் கழித்து ஒரு ஆட்டோ வந்தது. க்ளினிக்கை அடைந்து காத்திருக்கத் தொடங்கினாள் அவள். டாக்டர் வர நேரமாகும் என்று க்ளினிக் ரிசப்ஷனிஸ்ட் சொல்ல , இருக்கையில் அமர்ந்தாள். லேசாக கண்களை மூடியபடி நினைவுகளை அசை போட ஆரம்பித்திருந்தாள்.

அது ஒரு தைப் பொங்கல் தினம் , வீட்டில் நண்பிகளுடன் திரைப்படம் பார்க்கபோவதாக சொல்லிவிட்டு வந்திருந்தாள் அவள். இராமநாதபுரத்தில் ஐந்தாம் நம்பர் பேருந்து ஏறி சுங்கம் வந்து இறங்கிய அவளை தனது ஹீரோ ஹோண்டாவில் ஏற்றிக்கொண்டு பைக்கில் பறந்து கொண்டிருந்தான் அவன் , இராமநாதபுரத்தில் பைக்கில் ஏறினால் யாரும் பார்த்துவிட வாய்ப்புண்டு என்ற காரணத்தால் இப்படியான ஒரு ஏற்பாடு.

சத்யா , எப்ப நம்ம விசயத்தை வீட்ல சொல்லலாம்னு இருக்கே? “

அக்கா கல்யாணம் இன்னும் ஒரு மாசத்துல இருக்கு அன்பு , முடிஞ்சதும் அக்கா மூலமாவே வீட்ல சொல்லி சம்மதம் வாங்கிடலாம்னு நெனைக்கிறேன்….நீங்க எப்படி? “

எங்க வீட்ல அப்பா மட்டும்தானே , நான் சமாளிச்சுடுவேன் , உங்க வீட்டு சம்மதம் தான் உடனடித்தேவை.”

அவனால் , அப்பாவின் சம்மதத்தையும் வாங்க முடியவில்லை , இவளால் தன் வீட்டின் சம்மதத்தையும் வாங்க முடியவில்லை. தனது அலுவலகத்தில் சொல்லி மதுரைக்கு மாற்றல் வாங்கிக்கொண்ட அவனும் , அவளும் ஒரு நாள் அதிகாலை மதுரைக்கு பேருந்தில் ஏறினார்கள்…!!

ஒரு வருடமும் , சில மாதங்களும் மிகச் சந்தோசமாகக் கழிந்தது. ஒரு நீண்ட தேனிலவாகவே அவர்களது மதுரை வாழ்வும் இருந்தது………அவ்வப்போது அம்மா , அப்பாவின் நினைப்பு வந்திருந்தாலும் அவனது அரவணைப்பு அத்தனையையும் மறக்கடித்தது……..

இந்த ஒரு பத்து நாளாக ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான் என்று புரிபடவேயில்லை அவளுக்கு . அவன் எப்போதும் குடிப்பவன் தான் , சனியிரவில் தன் கையாலேயே விஸ்கியில் சோடாவைக் கலக்கி நிறைய முறை கொடுத்திருக்கிறாள் அவள். ஆனால் வெளியே தனியே குடித்துக் கொண்டு வருவது இந்த இரண்டு வாரங்களாகத் தான். ஆபிஸில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை என்ற அங்கலாய்ப்பே அதிகமிருந்தது அவளிடம்.

டாக்டர் வந்துவிட்டார்.

ஏம்மா தனியாதான் வந்தியா? அன்பு வரலை ? கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்காரே? என்று கடிந்தவாறு தேவையான மருந்துகளையும் எழுதிக் கொடுத்தார் டாக்டர். மீண்டும் ஆட்டோ பயணத்தில் வீடு வந்து சேர்ந்துஅன்புவிற்காக காத்திருந்த போதுதான் இந்த கதையின் முதல் பகுதி ஆரம்பித்திருந்தது.

தனது ஹீரோ ஹோண்டாவை முறுக்கிக் கொண்டிருந்தான் அன்பு….போன மாதம் செக்கப்பிற்கு போன அந்த நாளை நினைத்துக் கொண்டே……

அதே க்ளினிக்தான் , செக்கப்பிற்காக அல்ட்ரா ஸ்கேன் அறையில் படுத்திருந்தாள் சத்யா , செக்கப் முடித்து வெளியே வந்த டாக்டர்

மிஸ்டர் அன்பு , வீட்ல யாரும் பெண்கள் இல்லையா ? ஏன்னா , சத்யா நிறைய சாப்பிடணும் ,நல்லா வாக்கிங் போகணும் , எவ்வளோ தடவ சொல்லியிருக்கேன் , கூட நீங்க இருந்து கவனிச்சுக்கலாமே ? இல்ல நீங்க பகல்ல ஆபிஸ் போகணும்னா அவுங்க அம்மாவையாவது கவனிச்சுக்க சொல்லலாமே? இல்லாட்டி கண்டிப்பா டெலிவரி டைம்ல ப்ராப்ளம் ஆகிடும்என்றார்..

சரிங்க டாக்டர் , நான் ஏற்பாடு பண்ணறேன்என்றவாறு அப்போதுதான் அல்ட்ராஸ்கேன் அறையிலிருந்து வெளியே வந்த சத்யாவை கூட்டிக்கொண்டு வீடு சேர்ந்தான்.

சத்யா , டாக்டர் நிறைய சாப்பிடணும்கிறாரும்மா , நான் நிறைய வாங்கி வச்சிருக்கற பழமெல்லாம் சாப்பிடறதே இல்லியா ? ஆபிஸ்ல இன்னும் மூணு மாசத்துக்கு ஹெவி வொர்க் இருக்கும்மா , வேணும்னா நான் வேணா கோயமுத்தூர் போய் உங்க அம்மாவை சமாதானப் படுத்தி கூட்டிட்டு வரட்டுமா , கொஞ்சநாள் கூட இருக்கட்டும், இல்ல நீ போய் அங்க இரு , குழந்தை வயித்துல இருக்குன்னா சமாதானம் ஆயிடுவாங்கஎன்றான் அவன்….

இல்லங்க , , என்னால தனியாவே சமாளிச்சிக்க முடியும் , உங்களால என்ன ஒண்ண்ரை வருசமா பாத்துக்க முடிஞ்சதே , இதுவரைக்கும் நான் செத்தேனா , பொழைச்சேனான்னு வந்து பாத்திருப்பாங்களா? நீங்க அங்க போயி அவமானப் படுறதை என்னால தாங்க முடியாது…” வீறாப்பாகச் சொல்லிவிட்டாள் அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயற்சித்தும்.! அடுத்த நாள் அலுவலகத்திலும் விடுமுறைக்கு முயற்சித்துத் தோற்றான் அவன்………

மணி பத்து ஆயிற்று , காத்திருந்தாள் அவள் , அழுகை அழுகையாய் வந்தது…..அதிசயமாய் அம்மா ஞாபகமும் வந்தது………அம்மாவை அழைக்கலாமா என்ற நினைவு வந்தது.

கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அவனின் அவமானமும் , வேறெந்த ஈகோவும் தடையாயிருக்கவில்லை , தொலை பேசியில் அம்மாவை அழைக்க….

அம்மா…….” என்றழைத்து அதற்கு மேல் என்ன சொல்வதென்றே தெரியாமல் நிறுத்தினாள் அவள்

சத்திக்குட்டி…….நீயாடா கண்ணு? நல்லா இருக்கியாதளுதளுத்த குரலில் அம்மா…..

நல்லா இருக்கேன்மா , என்ன மறந்துட்டியா?” சத்யா

என்ற உசுர ஊட்டி வளத்த உன்ன மறப்பனா கண்ணு? அப்பாவோட பழைய நண்பர் மதுரைலதான் இருக்காரு…… ? கண்ணன் மாஸ்டர் , அவர்கிட்ட விசாரிக்குவோம்….! டாக்டர்கிட்ட போனியா கண்ணு ? எப்ப டேட் கொடுத்திருக்காங்க? " அம்மா

தன்னைப் பற்றி கவலைப்பட்ட பெற்றோரை தான் எண்ணியே பார்க்கவில்லை என்ற குற்றவுணர்வு இருந்தாலும் இயல்பிலேயே இருந்த ஈகோ காரணமாக காட்டிக்கொள்ளவில்லை அவள்

"ஏம்மா , நான் முழுகாம இருக்கேன்னு தெரிஞ்சபிறகும் பார்க்க வரணும்னு தோணவே இல்லியாமா?”

தோணாம இருக்குமா கண்ணு ? ஆனா , உங்கப்பாவ பத்திதான் தெரியுமே உனக்கு? உன்ன மாதிரிதானே ? வறட்டுக் கெளரவ்ம் பாக்கிறவர் , நான் செஞ்சது தப்புன்னு சொல்லி நீ வந்து கால்ல விழுந்தாதான் நீ போகணும்னு ஒத்தக் கால்ல நின்னுட்டார்….நான் என்ன செய்வேன் ? “ அழுக ஆரம்பித்திருந்தார் அம்மா….

எப்போ அம்மா வர்றே , அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாரா? “ சத்யா உண்மையான எதிர்ப்பார்ப்புடன் கேட்டாள்.!

நாளைக்கே வர்றேம்மா , அப்பாவை நான் சமாளிச்சுக்கிறேன்அம்மா சொன்னார்.

போனை அதனிடத்தில் வைத்து விட்டு திரும்பினாள் அவள் , பைக் சத்தம் கேட்டது , அறைக்குள் சென்று படுக்கையில் படுத்து தூங்குபவள் போல் நடிக்க ஆர்ம்பித்துவிட்டாள் அவள்..!! இல்லாவிட்டால் தேவையற்ற வாக்குவாதம் வந்து மீண்டும் சண்டை வந்துவிடுமே , அதைத் தவிர்க்க !!!! உறங்கியும் போனாள் , அவனும்தான்…!

அடுத்த நாள் , அலுவலகத்தில் நண்பன் சரியாகவே பேசவில்லை

நீயெல்லாம் ஒரு மனுசனாடா ? உன்னக் காதலிச்சதுக்காக உன்ன நம்பி வந்த பொண்ணை இப்படி நிறை மாசத்துல அலைக் கழிக்கறையேடா ? இது நியாயமா? “

மாப்ளே , நீயுமாடா என்னைப் புரிஞ்சிக்கல? என் பொண்டாட்டியப் பத்தித் தான் தெரியுமில்லே ? சரியான பிடிவாதம்! ஆபிஸ்ல லீவும் இல்லை , அதனால என்னாலயும் அவளை சரியா பாத்துக்க முடியலை , அவளும் அவுங்கம்மாவ உதவிக்கு கூப்பிட மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா , எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன் , கேக்க மாட்டேங்கிறா ….

நான் என்ன பண்ண ? அதனால தான் ஒரு வாரமா வேணும்னே இப்படி பண்ணறேன் , அதுக்கப்பறமாவது அவுங்க அம்மாவை உதவிக்கு கூப்பிட சம்மதிப்பாளான்னு பாக்கறேன்கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு , ஆனா , யாரும் உதவிக்கு இல்லாம அவ தனியா கஷ்டப்படறத சகிக்க முடியலைடா ,”

ஆபிஸ் முடிந்து அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பியிரூந்தான் அவன்!

மாமனாரும் , மாமியாரும் வீட்டில் இருந்தார்கள்யோசனை பலித்ததுடன் மனைவியின் கஷ்டம் தீர்ந்த சந்தோசத்துடன் அவர்களை வரவேற்றான் , அவர்கள் முன்னிலையில் எப்போதும் போல பேசிய அவள் இரவுணவை முடித்த பின் அறைக்கு வந்து படுத்திருந்தாள்….

அவள் ஏதும் பேசவில்லை , பேசுவதாகவுமில்லை அவள்……அதில் அவளது கோபத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவனும் மெளனமாயிருந்தான் !!!!! ஆனால் அதில் அர்த்தமிருந்தது.!!!!!!!!!!!



Comments

Popular posts from this blog

பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது!

சீமான்களின் சபையினிலேயே , கடிதம் எழுதி எழுதிக் களைத்துப்போனதோர் கிழட்டுச் சிங்கம்.....முன்னாலுக்கும் முன்னால் அவர் கொண்ட தமிழ்ப்பற்று.....இன்னாளில் அது தமது மக்கட்பற்றாய் மாறிப்போனதொரு சோகம். ஏதோவொரு புண்ணியத்தில், எவரோ செய்த வரலாற்றுத் தவறால் , கொள்கை , தொலைநோக்கு , மக்கட்பற்று இவை பற்றிய சிந்தையேதுமின்றி அரசியலில் விபத்தாய் விளைந்த கொடநாட்டு ஈழத்தாய்....தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே தமிழர் பற்றியும் , தமிழர் அரசியல் பற்றியும் எழுதி வைத்துப் பேசும் செல்வி யவர்.........இன்னமும் அவர் சேலை பிடித்துத்திரியும் வீணர் கூட்டம்.! கூட்டணிக்கேற்றப்படி கொள்கையை மாற்றிக்கொள்ளும் மருத்துவப் படையாச்சி.........வீரமிகு வன்னியகுலத்திலே வந்துதித்த சந்தர்ப்பவாதச் சாக்கடை....சமரசமற்ற கொள்கை அரசியலை சந்தர்ப்பவாதச் சாக்கடைக்குள் தள்ளிய பெருமைக்குரிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்காத தமிழ்க்குடிதாங்கி! யாரை எதற்காக எதிர்த்து அரசியல் செய்யவேண்டுமே அவர்களோடே தம் தேவைக்குதந்த படி கூட்டு வைத்துக்கொண்டு ஈழத்திற்க்காய் எந்நேரமும் பாடுபடும் திரு.வைகோ அவர்கள்....அவரும் சிறை சென்றார்.

நண்பர் 'டோண்டு' ராகவன்...

உயிரோடு இருக்கும்வரை அறிக்கைகளால் அர்சித்து எதிர்ப்பரசியல் நடாத்தி செத்துபோன பிறகு ஆருயிர் நண்பர் என்று அழைத்துக்கொள்ளும் எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நான். எனக்கும் மறைந்த உயர்திரு 'டோண்டு' ராகவன் அவர்களுக்குமான பரிச்சயம் அவ்வளவொன்றும் அதிகமில்லைதான். பதிவுலகையும் , பர்ஸனல் லைப்பையும் பிரித்து வைத்துக்கொள்ளும் எண்ணமுடைய நான் , டோண்டு மட்டுமல்ல மற்றபல பதிவுலக நண்பர்களுடனும் கூட தனிப்பட்ட தொடர்புகளை வைத்துக்கொண்டதில்லை... இருந்தாலும் , அவ்வப்போது பதிவுலக பின்னூட்டங்களின்பாலே தொடர்ந்துகொண்டிருந்த தொடர்பு , எனது 'போலி டோண்டு' பற்றிய கட்டுரையொன்றிலேயே  தீவிர விவாதமாக மாறியது.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீதோ இல்லை அவர்தம் பிற்போக்கான கருத்துக்கள் மீதோ இருந்திருக்கலாம். கடினமாக ஓரிரு முறை பேசியிருக்கலாம்.. அத்தனையும் தாண்டி அவர் மிக நல்ல மனிதர் , கடும் உழைப்பாளி என்பதை அவரது பதிவுலகம் மூலமாக அறிந்தவனெனினும் உறுதியாக கூறவியலும்.. அத்தகைய நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்... வருத்தங்கள

எஸ்.எஸ்.பொன்முடி - மனிதருள் மாணிக்கம்.

எஸ்.எஸ்.பொன்முடி , கொங்குச்சீமையிலே குறிப்பாக பல்லடம் , சூலூர் வட்டாரத்தில் தெரியாதவர்கள் சொற்பமே. எஸ்.எஸ். பொன்முடி அவர்கள் மட்டுமல்ல , அவர்களது குடும்பமே சூலூரில் பழம்பெருமை மிக்க குடும்பம். காலங்காலமாக அவர்களது குடும்பத்தினரே சூலூரின் அனைத்து தேர்தல்களிலும் வென்றதும் , வெல்வதும் வரலாறு. பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவராயினும் மாற்றுக்கட்சியினராலும் மதிக்கப்படும் சில மனிதர்களில் எஸ்.எஸ் பொன்முடியும் ஒருவர். அவருக்கும் , எனக்குமான பரிச்சயமொன்றும் அவ்வளவு அதிகமில்லைதான். அப்போது எனக்கு ஒரு பத்திலிருந்து , பதினைந்து வயதிருந்திருக்கலாம். கலங்கலில் கவுன்சிலர் தங்கவேலு சர்வ அதிகாரமும் பொருந்தியவராய் வலம் வந்துகொண்டிருந்தார். அவர் எஸ்.எஸ்.பொன்முடியின் வலக்கரம். ஊருக்கு மேற்கே ஜல்லிக்குழி என்ற மனிதர்கள் உபயோகப்படுத்த முடியாத , இயலாத பகுதி ஒன்றிருந்தது.....அப்போது கழகம் ஆட்சியிலிருந்தது + பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்தார். கட்சிக்காரர்கள் , குறிப்பாக ஒடுக்கப்பட்ட , மிக பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் கேட்டுக்கொண்டதற்காக , மிகுந்த பிரயாசைப்பட்டு தங்கவேல் மற்றும் எஸ்.எஸ்.பொன்முடி அவ